Tuesday, 26 July 2016



தன் அச்சில் நில்லாமல் பூமி சுழல சுழல
இமயமதின் உச்சியில் உடல் சிலிர்க்க சிலிர்க்க அவன் நின்றான்...
சூரியனும் சந்திரனும் இருவிழிகளாக திசைகளை ஆடையாக்கி திகம்பரன் என பொலிந்தான்...
திசையாடை முழுவதும் விண்மீன்கள் நீந்திடவே அவன்
விண்வெளி முழுவதும் நிறைந்தான்...
நீலப்பந்தில் தவழும் காற்றென நிறைந்து அதன் மூலகூறில் கூத்தாடினான்...
மிதக்கும் மேகம்தன்னில் சிலம்பொலிக்க நடந்து நீர்த்துளிகளில் கலந்து உலகம் முழுக்க வியாபித்தான்...
வான் நோக்கி தகதகக்கும் செந்நிற ஜ்வாலையின் நுனியில் வலம் ஊன்றி இடம் தூக்கி கலீர் கலீர் என விண்ணதிர சதிராடினான்...
விரல் நுனிகளில் மானொன்றும் மழுவொன்றும் ஏந்திக்கொண்டு தன் ஆட்டத்தின் ஒவ்வொரு சுழற்சியிலும் பூமியை சுழற்றினான்...
அள்ளிப்பூசிய சுடலைப்பொடிகள் உதிர உதிர..
விழிதிரண்டு பொழிந்த நீர் ருத்திராக்‌ஷம் என உருள உருள..
பிரிந்த சடையின் உச்சியில் கங்கை திவலைகளென தெறிக்க தெறிக்க...
காலசர்ப்பம் பயத்தில் அவர் பொன் மேனியை சுற்றி இறுக்க இறுக்க...
பூவுலகம் மொத்ததையும் அசைக்கும் ஒரு திருநடனம் ஆடிவரும் என் இனிய நாட்டியக்காரா...
ஒருபோதும் எனைவிலக்காமல் உம்மோடு சேர்த்தருள்மின்... ஊழியிலும் நிலைகொள் என் இனிய திருவாலங்காட்டு அரசே....





No comments:

Post a Comment